டிச. 23ல் ராகுல் நெல்லை வருகை: நெல்லையில் இன்று கருப்பு பூனை படை ஆய்வு
நெல்லை: ராகுல் காந்தி வரும் 23-ம் தேதி நெல்லை வருகிறார். இதையடு்தது அவர் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் இடத்தை இன்று கருப்பு பூனை படையினர் ஆய்வு மேற்கொண்டனர். அவருக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி நெல்லை வருகிறார். அன்று காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார்.
பின்னர் வி.எம். சத்திரம் பரமேஸ்வரி பள்ளியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 20 நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். இதில் சுமார் 3 ஆயிரத்து 600 தலித் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஒன்றரை மணி நேரம் கலந்துரையாடல் நடக்கிறது. இளைஞர்களுக்கும், தலி்த்களுக்கும் காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தி்ல் இந்த கலந்துரையாடல் நடக்கிறது.
ராகுல் நிகழ்ச்சியை பாளை நூற்றாண்டு மண்டபம் அல்லது விஎம் சத்திரம் ரோஸ்மேரி பள்ளி வளாகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்துவது என முடிவு செய்தனர். இதில் நூற்றாண்டு மண்டபம் நகர எல்லைக்குள் இருப்பதாலும், 20 எம்பி தொகுதிகளை சேர்ந்தவர்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ரோஸ்மேரி பள்ளியை தேர்வு செய்துள்ளனர்.
அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி உள்ளது. மேலும் ஹெலிபேடில் இறங்கி செல்வதற்கான வசதியும் உள்ளது. ராகுல் வருகையையொட்டி பளளி வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
நேற்று ராகுலின் பாதுகாப்பு அதிகாரி கோத்தாரி, டிஐஜி சண்முகராஜேஸ்வரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஹெலிபேடு மற்றும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். ராகுல் பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து இன்று கருப்பு பூனை பாதுகாப்பு படையினர் வருகின்றனர். அவர்களும் ராகுல் நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் கான்வாய் பகுதியை ஆய்வு செய்கின்றனர்.
ஆயுதபடை மைதானத்தில் இருந்து ரோஸ்மேரி பள்ளி வரை 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.