காமன்வெல்த் ஆவணங்கள் மாயம்: விசாரிக்கும் சிபிஐ!
டெல்லி: காமன்வெல்த் விளைட்டுப் போட்டிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளன. யாரோ வேண்டுமென்றே அவற்றை அழித்தோ அல்லது மறைத்தோ வைத்திருக்கக்கூடும் என்று விசாரணைக் குழுவினர் சந்தேகிக்கின்றனர்.
காமன்வெல்த் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் இருந்து டென்டர், நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்பந்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக அதிகாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடையாளம் தெரியாத ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் யாரோ முக்கிய ஆவணங்களை அப்புறப்படுத்தியும், அதில் உள்ள தகவல்கள்களை மாற்றியும் இருப்பதற்கான போதிய ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.
எந்தெந்த ஆவணங்கள் எல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லையோ, அவை குறித்து சிபிஐ அதிகாரிகள் ஒரு பட்டியல் தயாரித்துள்ளனர்.
இந்த உண்மை ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் லலித் பனோட் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை சோதனை போட்டபோது வெளியே வந்தது. இந்த சோதனையில் 20 முதல் 30 பேர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டது.