மறைந்த முன்னாள் கேரள முதல்வர் கருணாகரன் உடலுக்கு சோனியா அஞ்சலி
திருவனந்தபுரம்: மறைந்த முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்குகள் தொடங்கின.
கேரளாவில் நான்கு முறை முதல்வராக இருந்தவரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான 92 வயது கருணாகரன் நேற்று மரணமடைந்தார். தனது கடைசிக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடி கொடுத்தவர் கருணாகரன். தனிக்கட்சியும் கண்டார். ஆனால் அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. மாறாக மீண்டும் காங்கிரஸையே சரணடைந்தார்.
கருணாகரனின் உடலுக்கு காங்கிரஸார் பெரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இன்று டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து கருணாகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் வந்திருந்தார்.
பின்னர் கருணாகரனின் உடல் அவரது சொந்த ஊரான திருச்சூருக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் இறுதி யாத்திரை தொடங்கியது. பல்வேறு நகரங்கள் வழியாக திருச்சூருக்குக் கொண்டு செல்லப்படுகிறது கருணாகரனின் உடல்.
முன்னதாக மருத்துவமனையிலிருந்து கருணாகரனின் உடல் இன்று காலை எட்டே கால் மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
திருச்சூர் கொண்டு செல்லப்படும் கருணாகரனின் உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது. இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சூர் கொண்டு செல்லப்படும் வழியில், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக சிறிது நேரம் உடலை வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது.