கோவையில் தேஜாஸ் இலகு ரக போர் விமானப் பிரிவை உருவாக்குகிறது விமானப்படை
மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய கடல் எல்லையை கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடற்படைக்கு உதவியாக விமானப்படையும் களம் இறங்கியுள்ளது. வான் வழி கண்காணிப்பு முன்பை விட தற்போது அதிகமாக உள்ளது. சந்தேகப்படும்படியான கப்பல் அல்லது படகு தென்பட்டால் உடனடியாக அவை தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தென்னிந்தியாவில் போர் விமானப் பிரிவுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது விமானப்படை. இதுகுறித்து விமானப்படை துணைத் தளபதி பி.கே.பார்போரா கூறுகையில், இலகு ரக போர் விமானங்கள் முதல் கட்டமாக நிறுத்தப்படவுள்ளன. அதன் பின்னர் படிப்படியாக சுகோய் போர் விமானங்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
தற்போது தென்னிந்தியாவில்தான் இந்திய விமானப்படையின் செயல்கள் சற்று குறைவாக உள்ளது. மேலும் லஷ்கர் இ தொய்பா போன்றவை தென்னிந்தியாவில் காலூன்ற முயன்று வருவதால், அங்கு விமானப்படையின் ஆதிக்கத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் விமானப்படையின் இருப்பு அதிகரிக்கப்படும் என்றார்.
முதல் கட்டமாக கோவை மாவட்டம் சூலூரில் இரண்டு ஸ்குவாட்ரன் இலகு ரக போர் விமானங்கள் நிறுத்தப்படவுள்ளன. விரைவில் இங்கு சுகோய் போர் விமானப் பிரிவும் ஏற்படுத்தப்படும்.
தென்னிந்திய கடற்பகுதி வழியாக லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் ஊடுறுவ வாய்ப்புள்ளதா என்று பார்போராவிடம் கேட்டதற்கு, தீவிரவாதிகள் எப்போது, எப்படி, எந்த மார்க்கமாக ஊடுறுவுவார்கள் என்பதை நாம் கணிக்க முடியாது. அதேசமயம், பாதுகாப்புப் படையினர் எத்தகைய ஊடுறுவலையும் முறியடிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
இந்தியாவின் முதல் இலகு ரக விமானம்:
தற்போது இந்திய விமானப்படையிடம் உள்ள இலகு ரக போர் விமானம் தேஜாஸ் ஆகும். இது முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்துக் கட்டப்பட்ட முதல் போர் விமானமாகும்.
முதலில் 220 தேஜாஸ் விமானங்களைப் பெற விமானப்படை திட்டமிட்டிருந்தது. ஆனால் அதன் செயல்பாட்டில் முழு திருப்தி விமானப்படைக்கு வராததால், தனது திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு முதல் கட்டமாக 20 விமானங்களை மட்டுமே சேர்க்க திட்டமிட்டுள்ளது. தேஜாஸின் செயல்பாடுகளைப் பார்த்த பின்னர் அவற்றை அதிகரிக்க விமானப்பைட முடிவு செய்துள்ளது.
மிக் 21க்குப் பதில் தேஜாஸ்:
இந்தியாவிடம் தற்போது உள்ள அறுதப் பழசான மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் படிப்படியாக விடை கொடுக்க திட்டமிட்டுள்ள இந்திய வி்மானப்படை அதற்குப் பதில் தேஜாஸை களம் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருவர் பயணிக்கக் கூடிய, ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட சூப்பர்சானிக் போர் விமானமான தேஜாஸ் இந்தியாவிலேயே வடிவமைத்துக் கட்டப்பட்டது என்றாலும் கூட அதில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் பங்கும் இருக்கிறது.
அமெரிக்கா, ரஷ்யாவுக்கும் பங்கு:
அதாவது விமானத்தில் அமெரிக்காவின் எப்.404-ஜிஇ-ஐஎன்20 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல, ரஷ்யாவின் advanced electronically scanned phased-array (AESA) ரேடாரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
வாஜ்பாய் சூட்டிய பெயர்:
இந்தியாவின் முதல் இலகு ரக போர் விமானமான தேஜாஸுக்கு அந்தப் பெயரை சூட்டியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். 2004ம் ஆண்டு இப்பெயரை வாஜ்பாய் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.