கல்விக்கடனுக்கு லஞ்சம்-சிபிஐயிடம் சிக்கிய கனரா வங்கி ஊழியர்
நாசரேத்: நாசரேத்தில் கல்விக்கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வங்கி ஊழியர் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினார்.
நாசரேத் மர்காஷிஸ் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் தனபால். இவரது மகள் வசந்தி. இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்காக கல்விக் கடன் கேட்டு நாசரேத்தில் உள்ள கனரா வங்கியில் விண்ணப்பம் அளித்தார். ஆனால் கல்விக் கடன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு அட்டெண்டராக பணியாற்றி வரும் நாராயணன் என்பவர் ரூ.10 ஆயிரம் தந்தால் விரைவில் கல்விக் கடன் வாங்கித் தருவதாக தனபாலிடம் தெரிவித்தார். தனபால் இது குறித்து சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நாசரேத் வந்தது.
அவர்கள் ரசாயணம் தடவிய ரூ.8 ஆயிரத்தை தனபாலிடம் கொடுத்தனர். அந்த ரூபாய் நோட்டுகளை தனபால் வங்கி ஊழியர் நாராயணனிடம் நேற்று கொடுத்தார். அப்போது அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் நாராயணனை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இநத சம்பவம் நாசரேத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.