முல்லைப் பெரியாறு அணையில் தொழில்நுட்ப நிபுணர் குழு 3 நாள் ஆய்வு
தேனி: மத்திய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு நடத்துகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறியவும், அதன் கொள்ளளவை உயர்த்துவது குறித்து ஆராயவும் மத்திய அரசு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட குழுவை அமைத்தது.
இந்த குழுவில் தமிழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் ஒய்வு பெற்ற நீதிபதி தாமஸ் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி அணையை (தமிழகப் பகுதியில்) ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை மத்திய தொழில்நுட்ப நிபுணர்கள் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி அணையை ஆய்வு செய்கின்றனர்.
மத்திய மண் வள ஆராய்ச்சி நிலைய இணை இயக்குநர் ராஜ்பால்சிங் தலைமையிலான இந்த குழுவில் மத்திய மண் வள ஆராய்ச்சி நிலையம், மத்திய நீர் மற்றும் மின்சாரம் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த 5 நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.