2ஜி: சிபிஐ முன் அனில் அம்பானி ஆஜர், யுனிடெக்-டாடா ரியாலிட்டி அதிகாரிகளிடமும் விசாரணை
நேற்று யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, லூப் டெலிகாம் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் பாசு, எஸ்-டெல் நிறுவன தலைமை நிதி அலுவலர் அருண் மன்தானா, இன்னொரு அதிகாரி ராஜீவ் சிக்கா, டாடா ரியல்டி நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் மற்றும் அதிகாரி கிஷோர் சலதோர் ஆகியோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.
மேலும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடு்த்து அவர் இன்று ஆஜரானார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தவர் அனில் அம்பானி என்பதால் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. 2ஜி ஒத்க்கீட்டை முறைகேடாக பெற்ற ஸ்வான் மூலம் அனில் ஆதாயம் பெற்றாரா என்பது குறித்து இந்த விசாரணை நடக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் தசிபமேற்பார்வையில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ராசா, ஸ்வான் மற்றும் டிபி ரியாலிட்டி அதிபர் ஷாகித் உசேன் பல்வா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற இன்னொரு நிறுவனமான யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திராவிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது.
நாடு முழுவதும் 22 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ரூ.1,658 கோடிக்கு யுனிடெக் வாங்கியது. ஆனால், அதை வாங்கியவுடன் தனது 60 சதவீத பங்குகளை மட்டுமே நார்வே நாட்டை சேர்ந்த டெலினார் நிறுவனத்துக்கு ரூ.6,100 கோடிக்கு விற்றது. 60 சதவீதமே ரூ. 6,100 கோடிக்கு விலை போனால், அவர்களுக்கு ரூ. 1,658 கோடிக்குத் தரப்பட்ட ஸ்பெக்ட்ரத்தின் உண்மையான விலை ரூ. 6,100 கோடியை விட அதிகம் என்பதே பொருள்.
இந் நிலையில் யுனிடெக், டெலினார் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து யுனினார் செல்போன் சேவையை இந்தியாவில் தொடங்கின.
அதேபோல ராசா முதல்முறையாக தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, லூப் நிறுவனம் 21 சர்க்கிள்களுக்கு 2ஜி ஸ்பெட்க்ரம் லைசென்ஸ் பெற்றது. இதுபோன்று எஸ்-டெல் எனப்படும் சிவா டெலிகாம் நிறுவன அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு 5 சர்க்கிள்களில் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனங்களில் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் லைசென்ஸ் பெற டாடா நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவிலிருந்து கடனுதவியாக ரூ. 1,700 கோடி வரை தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு டாடா ஏன் உதவியது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் டாடா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுபோல, டிபி ரியாலிட்டிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றும் சிபிஐ வலையில் சிக்கியுள்ளது.
இதற்கிடையே, முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சரான பாஜக தலைவர் அருண் ஷோரி 21ம் தேதி சிபிஐயிடம் ஆஜராகி, பாஜக ஆட்சியில் ஏன் முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற கொள்கை பின்பற்றப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.