தமிழ மீனவர்கள் மீது இலங்கை தமிழ் மீனவர்கள் வெறித்தாக்குதல்-வலைகளை அறுத்து விரட்டினர்
ராமேஸ்வரம்: தமிழகத்திலிருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை நடுக் கடலில் சுற்றி வளைத்த இலங்கைத் தமிழ் மீனவர்கள் வெறித்தனமாக தாக்கி், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்தெறிந்து விரட்டினர்.
இத்தனை காலமாக இலங்கை கடற்படையினரிடம் சிக்கி சின்னாபின்னமாகி வந்தனர் தமிழக மீனவர்கள். இதைக் கேட்க ஒரு நாதியும் இல்லாத நிலை இருந்தது.
ஆனால் இத்தனை காலமாக தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வந்த இலங்கைத் தமிழர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது வெறித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
சமீப காலமாக இலங்கைத் தமிழ் மீனவர்கள், தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை தாக்கத் தொடங்கியுள்ளனர். தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அதற்குக் காரணம் கூறப்படுகிறது.
சமீ்பத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்களை சிறை பிடித்த இந்த இலங்கைத் தமிழ் மீனவர்கள், இப்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை நடுக் கடலில் தாக்கி சரமாரியாகத் தாக்கி அவர்களது வலைகளையும் அறுத்து கடலில் வீசி விரட்டியுள்ள செயல் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் 5 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது நடுக் கடலில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் அவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்குதகல் நடத்தினர். பின்னர் மீனவர்களின் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்து வீசினர். பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக திட்டி, விரட்டியுள்ளனர்.
இலங்கைத் தமிழ் மீனவர்களின் இந்த வெறிச் செயல் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.