இன்றிரவு சென்னை வருகிறார் ஆசாத்-திமுகவுடன் பேச்சு
இன்று இரவு 9 மணியளவில் அவர் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவைச் சந்தித்துப் பேச்சு நடத்துகிறார். இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை அவர் சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி போட்டு வரும் நிபந்தனைகளுக்கு திமுக உடன்பட மறுத்து விட்டது.
கடைசியாக கிடைத்த தகவலின்படி காங்கிரஸுக்கு 66 சீட்கள் வரை தர திமுக தயாராக இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், ஆட்சியில் பங்கு கேட்கக் கூடாது என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாம்.
இதனால் பேச்சுவார்த்தையில் பெரும் முட்டுக்கட்டைநிலவுகிறது. இந்த நிலையி்ல நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு உறுப்பினர்கள் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினர்.
அப்போது இந்தப் பிரச்சினையை தன்னிடம் விட்டு விடுமாறும் மேலிடமே நேரடியாக திமுகவுடன் பேசிக் கொள்ளும் என்று சோனியா கூறியதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தங்கபாலுவும், சோனியா காந்தியே அடுத்த கட்ட முடிவை எடுப்பார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாபம் நபி ஆசாத் இன்று இரவு சென்னை வருகிறார். பின்னர் காங்கிரஸ் குழுவுடன் அவர் அறிவாலயம் வருகிறார். அங்கு இரவு 9 மணியளவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் பேச்சு நடத்துகிறார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் குலாம் நபி ஆசாத், முதல்வர் கருணாநிதியை சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.
தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் தீர்ந்தால் இன்று இரவே அல்லது நாளை காலையில் உடன்பாட்டில் இரு கட்சிகளும் கையெழுத்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை காலை 6 மணிக்கு குலாம் நபி ஆசாத், டெல்லி திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எந்த முடிவாக இருந்தாலும் இன்று இரவே தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.
குலாம் நபி ஆசாத்தே சென்னை வருவதால் திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் கிளைமாக்ஸை நெருங்கியுள்ளது.