மே மாதத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்த வைகோ கோரிக்கை
சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து முக்கிய கட்சிகள் அனைத்தும் அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்துள்ளன. முதல்வர் கருணாநிதியோ தேர்தல் ஆணையத்தின் போக்கை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக தவிர, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளும் தேர்தல் தேதியை மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போது மதிமுகவும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
ஏப்ரல் மாதம் 13ம் தேதியன்று தேர்தலை வைத்திருப்பதால் தமிழகத்தில் பிளஸ்டூ, பத்தாம் வகுப்பு மற்றும் பிற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்படும்.
மேலும் ஏப்ரல் 13ம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து 5 நாள் விடுமுறை வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் வெளியூர்களுக்குப் போய் விடுவார்கள். எனவே தேர்தல் தேதியை மாற்றி மே மாதத்தில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.