ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்தில்லை-முலாயம் சிங்

இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு முலாயம் சிங் யாதவ் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் முலாயம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் செய்து வந்து அடாவடித்தனத்தால் ஆத்திரமடைந்த திமுக, அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்தது. காங்கிரஸ் கட்சியுடனான உறவு முற்றிலும் முறியும் நிலை ஏற்பட்டால் அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவுக்கும் திமுக தள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைககளில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக ஆட்சிக்கான ஆதரவை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் அது இறங்கியுள்ளது.
தற்போது முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி (இக்கட்சிக்கு 22 எம்.பிக்கள் உள்ளனர்), லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருகின்றன.
இவற்றில் முலாயம் சிங் கட்சியை அமைச்சரவையில் சேர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக முலாயம் சிங் யாதவுடன் காங்கிரஸ் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முலாயம் சிங் யாதவை கூட்டணிக்குள் இழுத்து விட்டால், திமுக ஆதரவை வாபஸ் பெற்றாலும் கூட ஆட்சி கவிழாது என்ற நிலையை ஏற்படுத்த முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் முலாயம் சிங் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக விலகியதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏதும் இல்லை. திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன, அவ்வளவுதான்.
என்னுடன் 3 நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். இருப்பினும் அரசில் வந்து இணையுமாறு அவர் அழைப்பெல்லாம் விடுக்கவில்லை. ஏற்கனவே அரசுக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறோம். அதில் மாற்றம் இல்லை என்றார் முலாயம்.
முலாயம் சிங் யாதவ் அரசில் இணைந்தால் அவரது கட்சிக்கு தற்போது திமுக வசம் உள்ள துறைகள் அப்படியே வழங்கப்படலாம். அதேசமயம், அவர் முக்கியமான துறைகளைக் கேட்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
டெல்லியில் எழுந்துள்ள இந்த புதிய திருப்பத்தால், திமுகவை எதிர்க்க காங்கிரஸும் தயாராகி வருவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications