பேச்சுவார்த்தை தொடரும் என நம்புகிறோம்-காங்.
டெல்லி: திமுக முடிவு குறித்து நாங்கள் அவசரப்பட்டு எதையும் சொல்ல விரும்பவில்லை. பேச்சுவார்த்தை தொடரும் என்று நம்புகிறோம் என்று காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில், திமுக நேற்று அதிரடி முடிவை எடுத்து அறிவித்தது. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை காங்கிரஸ் என்று தெரிகிறது.
திமுகவின் முடிவு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எல்லாம் முடிந்து போய் விட்டதாக நாங்கள் கருதவில்லை. பேச்சுவார்த்தை தொடரும் என நம்புகிறோம்.
இந்த சமயத்தில் நாங்கள் கருத்துக் கூற விரும்பவில்லை. பேச்சுவார்த்தைக்கு நடுவேதான் இது நடந்துள்ளது. பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. எனவே இந்த சமயத்தில் பத்திரிகைக் கருத்துக்கள் மூலம் எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. அது குழப்பத்தை அதிகரிக்கவே செய்யும்.
திமுகவின் முடிவு அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு வரவில்லை. வந்த பிறகுதான் அதுகுறித்துப் பேச முடியும் என்றார் அவர்.