காங். குறித்து கவலையில்லை, திமுக சாதனைகள் வெற்றி தேடித் தரும்-பாமக
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 31 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த தொகுதிகள் எவை என்பதை தீர்மானிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
இதற்காக சற்று முன்பு திமுக, பாமக குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்பேச்சுவார்த்தையில், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு பங்கேற்றது. பாமக சார்பில் ஜி.கே.மணி, ஆர்.வேலு, வேல்முருகன், ஏ.கே.மூர்த்தி, தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது தாங்கள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளையே முடிந்தவரை ஒதுக்குமாறு பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
ஸ்டாலின் தலைமையிலான குழுவுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதியையும், பாமக குழு சந்தித்தது.
அதன் பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது.
திமுக அரசு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று திமுக மனதார விரும்பியது. ஆனால், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம் பெறாதது பாதிப்பை ஏற்படுத்தாது.
திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி, கிலோ அரிசி ஒரு ரூபாய் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகவே திமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் மணி.