அனைத்துக் கட்சிகளையும் மதிக்கத் தெரிந்த கட்சி திமுக-கொமுக
திருப்பூர்: அனைத்துக் கட்சிகளையும் மதிக்கத் தெரிந்த கட்சி திமுக. புதிதாகத் தொடங்கப்பட்ட கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தையும் அவர்கள் உரிய முறையில் மதித்ததால்தான் நாங்கள் திமுக கூட்டணியில் சேர முடிவு செய்தோம் என்று அக்கட்சி பொருளாளர் பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இணைந்துள்ள கொமுகவுக்கு 7 சீட்களை திமுக ஒதுக்கியுள்ளது. விரைவில் இக்கட்சிக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படவுள்ளன.
இந்த நிலையில் திருப்பூரில் கொமுகவின் பொருளாளர் பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
புதிதாக துவங்கிய கொ.மு.க. கட்சிக்கு தி.மு.க., உரிய மரியாதை அளித்தது. அணுகுவதற்கு எளிமையாகவும், தெளிவான கொள்கைகளையும் கொண்டுள்ளதால் தி.மு.க.,வுடன் இத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டது; கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்த கொ.மு.க. தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளில் இதை சேர்க்க உறுதியளிக்கப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் கிட்டத்தட்ட 55 தொகுதிகள் உள்ளன. இதில் கொமுக, திமுகவுடன் சேர்ந்து செயல்பட்டு, குறைந்தது 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது உறுதி.
நாங்கள் 15 தொகுதிகளைக் கேட்டோம். 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எங்களது கட்சி சார்பில், எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் தனித் தொகுதிகளும் தரப்படும். அங்கு தலித் வேட்பாளர்களை நிறுத்துவோம். தலித் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட கட்சியாக, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் எண்ணங்களையும் ஏற்று செயல்படுவோம் என்றார்.