திமுக விலகல் முடிவால் மத்திய அரசு கவிழுமா?
டெல்லி: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது என்ற திமுகவின் முடிவால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு இப்போது ஆபத்து ஏதும் இல்லை. அதேசமயம், மத்திய அரசுக்கான தனது ஆதரவை திமுக முழுமையாக வாபஸ் பெற்றால்,மத்திய அரசு சிறுபான்மை அரசாக மாறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
3வது பெரிய கட்சி திமுக:
திமுகவுக்கு தற்போது லோக்சபாவில் 18 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 7 பேரும் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக விளங்குகிறது. 2வது பெரிய கட்சியாக திரினமூல் காங்கிரஸ் உள்ளது.
லோக்சபாவில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 543 ஆகும். பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 272 ஆகும். ஆனால் தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் 260 பேர்தான் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்றவை வெளியிலிருந்து ஆதரவு தருவதால்தான் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்சிகளின் ஆதரவையும் சேர்த்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவு எண்ணிக்கை 311 ஆக உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக 207 எம்.பிக்களும், திரினமூலுக்கு 19 பேரும் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பலம் (வெளியிலிருந்து ஆதரவு தருவோரைத் தவிர்த்து) 242 ஆக குறைந்து விடும். ஆட்சிக்கு ஆபத்தாகி விடும்.
மமதா, லாலு நாட்டாமை அதிகரிக்கும்:
திமுக ஆதரவை வாபஸ் பெற்றால், லாலு, முலாயம் சிங் யாதவ், மாயாவதி, மமதா பானர்ஜி போன்றோரின் கை ஓங்கி விடும். ஆளாளுக்கு காங்கிரஸை பல ரூபங்களில் மிரட்ட ஆரம்பித்து விடுவார்கள். அது காங்கிரஸுக்கு பெரும் இடியாப்பச் சிக்கலாகி விடும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் இவர்களைத் தொங்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு விடும்.
எனவே முக்கியக் கட்சியான திமுகவின் தயவு, ஆட்சி தொடர மிகவும் அவசியம், நாளையே திமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றால் காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலை கேள்விக்குறியாகி விடும். பின்னர் திரினமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி, லாலு கட்சி என பலரையும் தாஜா செய்ய வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்படும்.
அதோ கதியாகும் வாய்ப்பு:
தமிழகத்தில் திமுகவிடம் வம்பு செய்ததைப் போலவே தற்போது மேற்கு வங்கத்திலும் திரினமூல் காங்கிரஸிடம் வீராப்பாகப் பேசி வருகிறது காங்கிரஸ். ஆனால் திமுக இப்போது கொடுத்துள்ள அடியால், மமதா பானர்ஜிக்கு மறைமுகமாக பலம் கூடி விட்டது. காங்கிரஸ் ஓவராகப் பேசிக் கொண்டிருந்தால் மமதாவும், திமுக பாணியில் வெளியிலிருந்து மத்திய அரசுக்கு ஆதரவு என்ற நிலையை எடுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நேர்ந்தால் மன்மோகன் சிங் அரசின் கதி அதோ கதியாகக் கூடிய வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.