தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பெயரை மாற்றுவோம்-சரத்குமார்

விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே அரசியலில் புகுந்தவர் சரத்குமார். உண்மையில் அவரது நாட்டாமைப் படம்தான் அவரது அரசியல் பிரவேசத்திற்குக் காரணம் எனலாம். அந்தப் படத்தை அப்போது ஜெயா டிவி தடாலடியாக ஒளிபரப்ப கோபமடைந்த சரத்குமார் திமுகவில் இணைந்தார்.
அதன் பின்னர் திமுகவில் ராஜ்யசபா எம்.பியாக்கப்பட்டார். இருப்பினும் அதற்கு மேல் அவருக்கு கட்சியில் முன்னேற்றம் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியை விட்டு விலகினார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவை தேடிப் போய் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் அதே வேகத்தில் கட்சியை விட்டும் விலகினார். அதன் பின்னர் விஜயகாந்த் பாணியில் தனிக் கட்சி தொடங்கினர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்பது இதன் பெயர்.
புதிய கட்சி தொடங்கினாலும் கூட அரசியலில் எடுத்து வைத்த முதல் அடியிலேயே நிற்கிறார் சரத்குமார். இந் நிலையில் தனது கட்சியின் பெயரை மாற்றப் போவதாக சரத்குமார் திடீரென கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் சமத்துவ மக்கள் கட்சியின் பெயர் மாற்றப்படும். சட்டசபைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பேசுவோம் என்றார்.
நாடார் சமுதாயத்தினர் தொடங்கும் புதிய கட்சி!
இதற்கிடையே, இன்றைய நாளிதழ்களில் ஒரு விளம்பர அறிவிப்பு வெளியானது. அனைத்து நாடார் அமைப்புகள் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடார் சமுதாயத்தினருக்கு அன்பு வேண்டுகோள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அதில், சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில் உள்ள இந்திய நாடார்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் கூட்டம் ஒன்று நடந்ததாகவும் அதில் சரத்குமார் உள்ளிட்ட நாடார் சமுதாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும், அப்போது நாடார் சமுதாயத்தினருக்காக புதிய அரசியல் அமைப்பை உருவாக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று மாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், பல்வேறு நாடார் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது.
அதன்படியே இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்தான் தனது கட்சியின் பெயரை மாற்றப் போவதாக சரத்குமார் கூறியுள்ளார். இதன் மூலம் நாடார் சமுதாயத்தினரின் பிரதிநிதியாக அரசியல் அரங்கில் செயல்படும் வகையில் தனது கட்சியை சரத்குமார் மாற்றியமைக்கப் போவதாக கூறப்படுகிறது.
அதாவது வன்னியர்களுக்கு பாமக, தலித் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்பதைப் போல, இனி நாடார் சமுதாயத்தினருக்கான தனிப் பெரும் கட்சியாக சமத்துவ மக்கள் கட்சி மாறவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், தேர்தலில் நாடார் சமுதாயத்தினருக்கு உரிய சீட்களைப் பெறும் வகையில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications