'கைவிடாது அதிமுக'...திமுக-காங் கூட்டணி உறுதியானதால் மதிமுக, இடதுசாரிகள் நிம்மதி
திமுகவுடன் மோதலில் உள்ள காங்கிரஸை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முயன்றார். அவருக்காக ஒரு பத்திரிக்கையாளரும், நீதிமன்ற வழக்குகள் மூலமே அரசியல் நடத்தி வரும் ஒருவரும் டெல்லியில் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர்.
மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த 6ம் தேதியே தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிட்டிருந்த அதிமுக அதை கிடப்பில் போட்டது.
காங்கிரசுக்கு சிக்னல் கொடுக்கும் வகையில் மதிமுகவுடன் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்தது அதிமுக. அதே போல இடதுசாரிகளை தனது கட்சி தலைமையகத்துக்கு அழைத்து வெளிப்படையாக பேச்சு நடத்துவதை நிறுத்திவிட்டு, சென்னை தியாகராயர் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ரகசிய பேச்சில் மட்டும் ஈடுபட்டது அதிமுக.
இதனால் மதிமுகவும் இடதுசாரிகளும் பெரும் கவலையில் இருந்தன. இரு தினங்களுக்கு முன் திமுக-காங்கிரஸ் கூட்டணி சரியாகிவிடும் என்பது போன்ற நிலை ஏற்பட்டவுடன் அதிமுகவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அழைத்துப் பேச்சு நடத்தியது அதிமுக தேர்தல் பணிக் குழு. ஆனால், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவி்ல்லை.
மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்ற நிலைமை உருவானபோது, இடதுசாரிகள்-மதிமுகவை மீண்டும் தொங்கலில் விட்டது அதிமுக.
இந் நிலையில் இப்போது திமுகவும் காங்கிரசும் கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டதால், இப்போது மீண்டும் மதிமுக, இடதுசாரிகளுடன் அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய தமிழகத்துக்கு 2 தொகுதிகளும், மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கும், இந்திய குடியரசுக் கட்சிக்கும் தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.
மதிமுக 36 தொகுதிகளைக் கேட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 20 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 18 தொகுதிகளும் கேட்டுள்ளன. ஆனால், மதிமுகவுக்கு 18 தான் என்று அதிமுக கூறிவிட்டது. இதையடுத்து 25 இடங்களாவது தருமாறு மதிமுக கோரியுள்ளது.
நேற்று திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில், மதிமுக தொகுதிப் பங்கீடு குழுவினரான மாரியப்பன், பாலவாக்கம் சோமு, குருநாதன் ஆகியோரை அழைத்துப் பேசினார். அப்போது 25 சீட்டாவது வேண்டும் என்ற கோரிக்கையை மதிமுக வைத்தது. கடந்த தேர்தலில் இந்தக் கட்சி 35 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல இடதுசாரிகளுக்கு மொத்தமாக 22 சீட் தருவதாகவும், அதைப் பிரித்துக் கொள்ளுமாறும் அதிமுக கூறியுள்ளது. இதை மார்க்சிஸ்ட் ஏற்க மறுத்துவிட்டது. தங்களுக்கு 13 இடங்களாவது வேண்டும் என்று கோரியுள்ளது. அவர்களுக்கு எவ்வளவு தருகிறீர்களோ அதையே எங்களுக்கும் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டும் கூறியுள்ளது.
பெரும்பாலும் இன்று அதிமுக கூட்டணியி்ல் தொகுதி பங்கீடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.