பிரதமரை விசாரிக்கத் தயாராகும் நாடாளுமன்ற கூட்டுக்குழு!
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் காரணமாக அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை துறை அறிவித்தது. இது தொடர்பாக, பாராளுமன்ற கூட்டுக்குழு, பொது கணக்கு குழு, சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., வரும் 31-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. அதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணையை நடத்தி முடித்து விட சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.
இன்னொரு பக்கம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் உலகின் எந்தெந்த நாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல நாடுகளின் ஒத்துழைப்பை அமலாக்கப் பிரிவு நாடியுள்ளது.
இதற்கிடையே பாராளுமன்ற பொது கணக்கு குழுவினரும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே இந்த குழு பல்வேறு அரசுத் துறையினரிடம் விசாரணை நடத்தி முடித்து விட்டது. அடுத்து பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ. நாயர், மந்திரி சபை செயலாளர் சந்திரசேகர், அமலாக்கப்பிரிவு இயக்குனர் அருண்மாத்தூர் ஆகியோரை அழைக்க பொது கணக்குக் குழு முடிவு செய்துள்ளது.
பிரதமரிடம் விசாரணை...
அடுத்தக் கட்டமாக பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த குழு விசாரிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. பிரதமரிடம் நடத்தப்படும் விசாரணைக்காக பொது கணக்கு குழு விரைவில் சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரை விசாரிக்க அழைப்பதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் முன்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போது அமைதி காக்கின்றனர்.