திண்டுக்கல்,உசிலம்பட்டியில் நடந்த ரெய்டில் ரூ. 92 லட்சம் சிக்கியது
திண்டுக்கல்: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் ஒன்றான சோதனை நடவடிக்கையில், திண்டுக்கல் மற்றும் உசிலம்பட்டியில் ரூ. 92 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ. 1 லட்சத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வோரிடம் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேலும் வங்கிகளில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தாலும் விசாரணை நடவடிக்கை பாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக, தமிழகம் முழுவதும் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனையின் பலனாக பல இடங்களில் பணம் கட்டுக் கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல தங்க நகைகள், பட்டுப் புடவைகளும் சிக்கி வருகின்றன.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை மடக்கி சோதனை போட்டனர். அப்போது காரில் ரூ. 34
லட்சம் பணம் இருந்தது. இதுகுறித்து காரிலிருந்த தென்னவன், சண்முகம் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, நிலம் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக கூறியுள்ளனர்.
ஆனால் தேர்தல் விதிமுறையை மீறி பெருமளவில் பணம் கொண்டு செல்லப்பட்டதால் பணத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பணம் அரசுக் கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இதேபோல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிறப்பு ரோந்துப் படையினர் செக்கானூரணி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையிலிருந்து வந்த மாருதி கார் ஒன்றை மடக்கி நிறுத்தி சோதனை போட்டனர். காரில் 2 மூடை நிறைய பணக் கட்டுக்கள் இருந்தன. மொத்தம் ரூ. 58 லட்சம் பணம் இரு்நதது. இதுகுறித்து காரில் இருந்த ஜெயக்குமார் என்பவரை விசாரித்தபோது தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிவதாக அவர் கூறினார். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பணத்தைக் கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் பணத்தை அதிகாரிகள் திருப்பிக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கு பணம் கட்டுக் கட்டாக சிக்குவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.