லிபியாவில் பலியானவர்கள் உடல்கள் தமிழகம் வந்தன
நெல்லை: லிபியா கலவரத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் இன்று அவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தன.
லிபியாவில் பெரும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. புரட்சியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும், அதிபர் கடாபியின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கலவரத்தில் சிக்கி தலைவன்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளி முருகையா பாண்டியன், ஆலங்குளம் நாகல்குளம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் ஆகியோர் உயிர் இழந்தனர். மேலும், லிபியாவில் திருநெல்வேலியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த தொழிலாளிகளாக பணி புரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் கலவரத்தால் செய்வதறியாது தவித்தனர்.
லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு கப்பல்களும், விமானங்களும் அனுப்பியது. தற்போது திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக ஊர் திரும்பியுள்ளனர். மேலும், உயிர் இழந்த 2 பேரின் உடல்கள் லிபியாவிலிருந்து விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து திருவனந்தபுரம் வந்தது. திருவனந்தபுரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தன.