காங். போட்டியிடும் தொகுதிகள் முடிவானது-இன்று கருணாநிதி அறிவிக்கிறார்
காங்கிரஸ் மட்டுமல்லாமல், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் தொகுதிகளையும் முதல்வர் அறிவிப்பார் என்று தெரிகிறது. இந்த கட்சிகளுக்கான தொகுதிகளும் கூட முடிவாகி விட்டது.
தொகுதிகளை அடையாளம் காண்பதில் திமுக, காங்கிரஸ் இடையே பெரும் இழுபறி நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் ஒரு முறை இரு கட்சியினரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு,
காங்கிரஸுக்கு தொகுதிகளை ஒதுக்குவது திருப்திகரமாக முடிவு காணப்பட்டுள்ளது. இறுதிப் பட்டியலுக்கு திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் திங்கள்கிழமை காலை ஒப்புதல் அளிப்பார்கள். அதன் பிறகு தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி சென்னையில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளை கொடுத்துள்ளதாம் திமுக. ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகியவையே அவை என்று கூறப்படுகிறது.
அண்ணா நகர் தொடர்ந்து திமுகவினர் போட்டியிட்டுவரும் தொகுதி. தற்போது அதன் உறுப்பினராக இருப்பவர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. அதேசமயம், ராயபுரம், மயிலாப்பூர், தி.நகர் ஆகிய தொகுதிகள் அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தொகுதிகளும் இன்றே அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.