சொந்த பலத்தில் போட்டியிடும் ஒரே கட்சி நாங்கள் தான்-பாஜக
சென்னை: கர்நாடக மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவும், ஜனதா கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. 223 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இதில் முதல் கட்டமாக 134 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 89 தொகுதி வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படுவர்.
ஜனதா கட்சியின் 11 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் இன்று நடந்தது. இதில் தேர்தல் பிரசார சி.டி., கேசட் வெளியிடப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது,
தமிழ்நாட்டில் சொந்த பலத்தில் போட்டியிடும் ஒரே கட்சி பாஜக தான். வரும் தேர்தலில் நிச்சயமாக இரட்டை இலக்கில் வெற்றி பெறுவோம். கர்நாடக மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும் காலம் வரும். பாஜக எந்த நிலையிலும் கொள்கைகளையும், லட்சியத்தையும் விட்டுக் கொடுக்காது. மற்ற கட்சிகள் அவ்வளவு எளிதாக பாஜகவை ஓரங்கட்டிவிட முடியாது. தமிழகத்தை திராவிடக் கட்சிகள் 44 ஆண்டுகள் ஆண்டுள்ளன. தமிழகம் வளர்ச்சி பெறவில்லை மாறாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தே தீரவேண்டும் என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார்.