கூடன்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பில்லை: வளாக இயக்குனர்
தூத்துக்குடி: ஜப்பானில் பூகம்பத்தால் அணுஉலைகளில் வெடிவிபத்துகள் நடந்து வரும் நிலையில், நிலநடுக்கம், சுனாமியால் கூடன்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆபத்தில்லை என அதன் வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் இந்திய-ரஷ்ய கூ்ட்டு முயற்சியில் 1000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுமின் உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜப்பானில் ஏற்பட்டுள்ள பூகம்பம், சுனாமியால் ஃபுகுஷிமா டைச்சி அணு உலையில் இருந்து கதிர் வீச்சு வெளியாகும் அபயாம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், கூடன்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி கூடன்குளத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா டைச்சி அணுமின் நிலையம் கடந்த 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த அணு உலைகள் கொதி நீர் உலைகளாகும். சுனாமி நிகழ்ந்த போது அந்த அணு மின் நிலையம் தானாகவே நின்று விட்டது. அப்போது மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டது.
அணு உலையை குளிர்விப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்களால் 1 மணி நேரத்துக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் ஹைட்ரஜன் அணு உலைகள் வெடித்து சிதறியது. ஆனால் கூடன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அணு உலைகளும் நவீன பாதுகாப்பு அம்சங்கள் உடையன. கூடன்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதி நில அதிர்வு பாதிப்புகளுக்கு அதிகம் இலக்காகாத பகுதியாகும்.
குறைந்த நில அதிர்வு கொண்ட இரண்டாவது மண்டலமாக இந்த பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு சுனாமி நிகழ்ந்த போது கூட இப்பகுதியில் 3 மீட்டர் உயரத்திற்கே அலைகள் எழுந்தன. கூடன்குளம் அணுமின் நிலைய சுற்றுச்சுவர் கடல் மட்டத்தில் இரு்ந்து 7.5 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ளது. இதே போல் அணு உலை 55 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கு அமைக்கப்பட்டுள்ளவை உயர் அழுத்த நீர் அணு உலைகளாகும். இவை வெப்பம் அதிகமானாலும் இயல்பாகவே குளிரும் தன்மை உடையது. இதற்காக உள்ளே கடினமான பகுதியில் 4 ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமான தாக்குதல் நிகழ்ந்தால் கூட அணு உலைகளு்க்கு பாதிப்பு ஏற்படாது. அதையும் கருத்தில் கொண்டே அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.