என்னைத் தூற்றினால், நடப்பதே வேறு: சமக தலைவர் சரத்குமார் ஆவேசம்
நெல்லை: என்னைப்பற்றி தூற்றினால் நடப்பதே வேறு என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமக தலைவர் சரத்குமாருக்கு பாராட்டு விழா நேற்று பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. அதற்கு அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சபாபதி நாடார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது,
சமத்துவ மக்கள் கட்சியின் மூலம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க நான் பாடுபட்டு வருகிறேன். நான் அனைவரையும் அரவணைத்து செல்பவன். அதற்காக என்னை பலவீனமானவன் என எண்ணி விட வேண்டாம். நான் துரோகம் செய்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். நான் யார் சொத்தையும் எடுத்துச் செல்லவில்லை.
என்னிடம் இருக்கும் பணம் நான் சினிமாவில் உழைத்து சம்பாதித்தது. திரைமறைவில் இருந்து நான் ஒருக்காலும் போராட மாட்டேன். பின்னால் இருந்து யார் முதுகிலும் குத்த மாட்டேன். மெர்க்கன்டைல் வங்கியை மீட்க சமுதாயத்தில் இருந்து அழைத்தபோது நான் மறு பேச்சு பேசாமல் சென்றேன். மும்பையில் காமராஜர் பெயரில் கட்டிடம் கட்ட என்னை அணுகியபோது ரூ.5 லட்சம் வழங்கினேன்.
ஆனால் என்னை அழைக்காமலேயே அக்கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்திவிட்டனர். நல்லவர்களை தூற்றாதீர்கள். சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு அறுகதை இல்லை. என்னை சீண்டி பார்த்தால் சொந்த பந்தங்களை கூட நான் பகைத்து கொள்ள தயங்க மாட்டேன். நடப்பதே வேறு. சரத்குமார் நின்றாலும் தோற்கடிப்போம் என சிலர் கூறுகிறார்கள். தோற்பதால் மட்டும் எனது வேகம் குறைந்து விடாது.
எந்த காலத்திலும் எனது மக்கள் பணி தொடரும். பெருந்தலைவர் மக்கள் கட்சி என அவர்கள் துவங்க நினைக்கும்போது சமக பெயரில் போட்டியிடுவேன் என என் கருத்தை தெரிவித்தேன். முதல் நாள் கட்சி துவங்கி விட்டு மறுநாள் என்னை நீக்கி விட்டார்கள். சமகவை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது. சமகவை அழிக்க நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது என்றார்.