தொடர்ந்து பணியாற்றிட எங்களை அனுமதியுங்கள்-கருணாநிதி
திமுக தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை கருணாநிதி வெளியிட்டார்.
இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி, தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதலில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வரவேற்புரையாற்றினார்.
அதன் பின்னர் முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசினார்.
கருணாநிதியின் பேச்சு:
அவர் கூறுகையில், வாக்குறுதிகளிலேயே சிறந்த வாக்குறுதி, காப்பாற்றப்பட வேண்டிய வாக்குறுதி தேர்தல் வாக்குறுதி என்பதை அனைவரும் அறிவீர்கள். சில வாக்குறுதிகளை காற்றினிலே பறக்க விடப்பட்ட வாக்குறுதிகளாக இருப்பதை அறிவோம். அத்தகைய வாக்குறுதிகளாக திமுக வழங்குகம் வாக்குறுதிகள் ஆகி விடக் கூடாது என்பதற்காகவும், வழங்கி நிறைவேற்ற முடியாமல் ஆகி விடக் கூடாது என்பதற்காகவும், அவ்வாறு ஆகாது என்பற்காகவும் சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று திட்டமிட்டுக் கூறுவதை திமுக கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, கடைப்பிடித்து வருகிற வாக்குறுதிகளைக் கொண்டுள்ளது.
கடந்த தேர்தல்களின்போது சொல்லி விட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று நெஞ்சு நிமிர்த்திக் கூற முடியாத அளவு காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு மீட்பு போன்ற இவை அனைத்தும் ஆட்சியாளர்களாகிய எங்களின் தாமதம், அக்கறையில்லாமல் நிறைவேற்றாமல் இருப்பவை என்று கருதத் தேவையில்லை.
நீதிமன்றங்களில் போடப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் இவை நிறைவேற்றப்படாமல் உள்ளன.
முட்டுக்கட்டைகள் போடப்பட்டு ஓடாமல் இருக்கும் தேர், அவை அகற்றப்பட்டால் மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து ஆடி நகர முடிகிறது அல்லவா, அது போலத்தான் தவிர்க்க முடியாததும், நீதிமன்ற தலையீடுகளாலும், காவிரியானாலும், பெரியார் பிரச்சினையானாலும், சேது சமுத்திரத் திட்டமாக இருந்தாலும், முட்டுகட்டைகளால், விரைந்து நிறைவற்ற முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் நாளை மறுநாள் அல்லது என்றோ ஒரு நாள் எப்படியோ நிறைவேற்றிட முடியும் என்ற நம்பிக்கையோடு, திட்டங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு மனமார்ந்த வரவேற்பையும், வாழ்த்துக்களையும் எதிர்பார்த்து ஏழை எளியோர் சாமானிய மக்கள், பட்டணங்களிலே வசிப்போர், பட்டிக்காட்டிலே வசிப்போர் என அனைத்துத் தரப்பினரும் எங்களை தொடர்ந்து பணியாற்றிட அனுமதியுங்கள் என்ற வேண்டுகோளோடு தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்கிறேன் என்றார்.
கடந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் 'கதாநாயகனாக' விளங்கியது. திமுகவின் வெற்றிக்கும் மிக முக்கியக் காரணமாக இருந்தது.
முதல்வர் கருணாநிதியின் நண்பரும் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவருமான நாகநாதன் தான் அந்த அறிக்கையைத் தயாரித்தார்.
அதில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டிவி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து, தரிசு நிலத்தை மேம்படுத்தி நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்குதல், இலவச கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட 'கலர் கலர்' திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. அறிக்கையில் சொல்லப்பட்ட பெரும்பாலான திட்டங்களை திமுக நிறைவேற்றிவிட்டது.
இந் நிலையில் வரும் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையும் பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த தேர்தலில் 'கதாநாயகனாக' இருந்த திமுகவின் தேர்தல் அறிக்கை இந்த முறை 'கதாநாயகியாக' இருக்கும் என்று அவர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.