டிஜிபி லத்திகா சரணை மாற்றியது தேர்தல் ஆணையம்-போலாநாத் புதிய டிஜிபி
சென்னை : தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரணை திடீரென தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. தேர்தல் முடியும் வரை டிஜிபியாக போலோநாத் இருப்பார் என்றும் அறிவித்துள்ளது.
இதேபோல சில காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்து வரும் லத்திகா சரணை தேர்தல் முடியும் வரை அப்பொறுப்பில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்பட்டிருந்தது. இந்த நிலையில் லத்திகா மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதில் போலோநாத் டிஜிபியாக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும்வரை போலோநாத்தே தேர்தல் தொடர்பான காவல் பணிகளை பார்வையிடுவார். போலோநாத் தற்போது ஊழல் மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஜிபியாக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாங்கிட்டும் மாற்றம்
இதேபோல சென்னை புறநகர் காவல் ஆணையர் ஜாங்கிட்டும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் கரன் சின்ஹா புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார.
தென் மண்டல ஐஜியாக இருந்து வந்த பாலசுப்ரமணியத்திற்குப் பதில் சிபிசிஐடி ஐஜி மஞ்சுநாதா நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை கமிஷனர்-எஸ்.பி. மாற்றம்
மதுரை காவல்துறை ஆணையர் பாரி மாற்றப்பட்டு அவரது இடத்தில் சிபிசிஐடி ஐஜி கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் சரக டிஐஜி ஜான் நிக்கல்சன் மாற்றப்பட்டு சஞ்சய் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை புறநகர் எஸ்.பி. சின்னச்சாமி மாற்றப்பட்டு அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை எஸ்.பி. பாபு மாற்றப்பட்டு ஜோஷி நிர்மல்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை-தேனி ஆட்சியர்கள் மாற்றம்
தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலேயே முதல் முறையாக தனது சொத்து விவரங்களை வெளியிட்ட முதல் ஐஏஎஸ் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக கார்த்திக், வேலூர் ஆட்சியராக பழனிக்குமார், ஈரோடு ஆட்சியராக காமராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.