தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்ற 134 பெண்கள் கைது
சென்னை: தமிழகத்தில் கடந்த 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் மதுவிலக்கு வேட்டையில் 1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள், போலி மதுபானம் தயாரிப்பவர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து மதுபானங்கள், எரி சாராயம் கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
இந் நிலையில் போலீசார் நடத்திய ரெய்டில், 89,069 லிட்டர் கள்ளச் சாராயம், 19,920 லிட்டர் கள்ள சாராய ஊரல், 731 லிட்டர்கள் அளவுள்ள 2237 மதுபான பாட்டில்கள், 1 வேன், 1 கார் மற்றும் 13 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாராயக் கும்பல் அட்டூழியம்: 3 பேருக்கு வெட்டு-வி.சி பிரமுகர் வீடு சூறை:
காஞ்சீபுரம் அருகே உள்ள ஓரிக்கை, தும்பவனம் காட்டுப் பகுதியில் ஒரு கும்பல் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வருகிறது. இங்கு குடித்துவிட்டு வந்த ஒரு கும்பல், அப் பகுதி வாலிபர்களுடன் வாய்த் தகராறில் ஈடுபட்டது. இது கைகலப்பாக மாறியது.
இதையடுத்து அந்த வாலிபர்கள் தப்பியோடினர். அவர்களை கள்ளச் சாராயக் கும்பலை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள், உருட்டுக் கட்டைகளுடன் விரட்டினர். வாலிபர்கள் தப்பியோடிவிடவே, ஆவேசமடைந்த அந்த கும்பல் கத்தி, அரிவாளுடன் ஊருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது.
தெருத் தெருவாக சுற்றி வந்த அந்தக் கும்பல் கண்களில் பட்ட வாகனங்கள், வீட்டு கதவுகளில் கற்களை வீசி தாக்கினர். காந்திநகர் பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப்பாளர் டேவிட் என்பவரது வீட்டை அடித்து நொறுக்கினர். ஜன்னல், கதவுகை கல் வீசித் தாக்கிவிட்டு வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், பைக், லாரியை அடித்து உடைத்தனர்.
இதைத் தட்டிக் கேட்ட குமாரி, தன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அந்தக் கும்பல் வெட்டியது. இதில் அவர்களுக்கு கை, கழுத்து உடலில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களை மிரட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து காஞ்சீபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.