கொடைக்கானலில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பாதையில் சென்ற கார் 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிர் இழந்தனர்.
நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்தவர் பாரி (35). அவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி விநாயகசுந்தரி (30). அவர் பாங்க் ஆப் திருவாங்கூரில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவர்களது குழந்தைகள் ரியா (7), ரிவா (3 1/2).
கோடை விடுமுறை என்பதால் பாரி தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் சுப்பம்மாள் (53) ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். காரை பாரி ஓட்டினார்.
கொடைக்கானலை சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று மாலை காரில் தனது சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.
அப்போது மலைச்சாலையில் வந்து கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பாரி, விநாயகசுந்தரி, சுப்பம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பின்னால் வந்த வாகனங்களில் வந்தவர்கள் பள்ளத்தில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ரியா, ரிவா ஆகியோரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ரிவா இறந்து போனாள்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரிய குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.