சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு அப்பீல்-நாளை விசாரணை
டெல்லி: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து இன்று தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதன் பொருட்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் மற்றும் அரசு வக்கீல்கள் கடந்த சில நாட்களாக டெல்லியில், உச்சநீதிமன்ற சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.
அதிமுக அரசு அமைந்ததும் சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றதாக உள்ளதாக கூறி நடப்பு ஆண்டுக்கு அதை நிறுத்தி வைப்பது, நிபுணர் குழுவை அமைத்து அதை ஆராய்ந்து பின்னர் மேம்படுத்தி நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை எடுத்தது. இதுதொடர்பாக சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து ப்ள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு, பழைய பாடத்திட்டத்திலான புத்தகங்களை அச்சடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து பல்வேறு பொது நலன் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.அதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டத் திருத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலும் அமல்படுத்துமாறு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்து இன்று உச்சநீதிமன்றத்தை அணுகியது. தமிழக அரசின் அப்பீல் மனு விடுமுறைக் கால பெஞ்ச் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வழக்கின் அவசரம் கருதியும், நாளை மறு தினம் தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை திறக்க வேண்டியிருப்பதால் இதை விரைவாக இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மனு நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications