ஜூலை 8: இலங்கைத் தமிழர் கருத்தொற்றுமை நாள்: இ கம்யூ அறிவிப்பு
சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் விரைந்து தீர்வு காணக் கோரி ஜூலை 8ம் தேதியை அகில இந்திய அளவில் இலங்கைத் தமிழர் கருத்தொற்றுமை நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க உள்ளது என, அக் கட்சியின் தேசியச் செயலாளரான டி.ராஜா கூறினார்.
டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேற்று சந்தித்துப் பேசிய ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு பிரதமர் மன்மோகன் சிங்கை விரைவில் சந்தித்து வலியுறுத்தும்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றம் புரிந்துள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை அமைத்த குழு அளித்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க இலங்கை அதிபரை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாமில் வசிக்கிறார்கள்.
எனவே இது இந்தியாவுக்கு முக்கியமானப் பிரச்னையாகும். இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணக் கோரி ஜூலை 8 ம் தேதியை அகில இந்திய அளவில் இலங்கைத் தமிழர் கருத்தொற்றுமை நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க திட்டமிட்டுள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications