திருவண்ணாமலை அருகே போலீசுடன் கிராமத்தினர் மோதல்: தடியடி, கண்ணீர்புகை வீச்சு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் கிராமத்தில் கிராம மக்கள் போலீசுடன் மோதினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி மக்களை கலைந்துபோகச் செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் நேற்றிரவு தனது நண்பர் எழில்மாறனுடன் தேவனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கோலப்பட்டு அருகே செல்கையில் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தேவனூரைச் சேர்ந்த அருண்குமார், குணசேகரன், பரிசுத்தம் ஆகிய 3 பேர் செல்வகுமாரிடம் மோட்டார் சைக்கிளை எடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அடி தாங்க முடியாமல் செல்வகுமாரும், எழில்மாறனும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
ஆனால் அந்த 3 பேர் அவர்களை விடாமல் துரத்தியுள்ளனர். தப்பிக்க வேகமாக ஓடியபோது செல்வக்குமார் கால் தவறி தரைக் கிணற்றில் விழுந்தார். இதில் அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். துரத்தி வந்த அருண்குமாரும் அந்த கிணற்றுக்குள் விழுந்தார்.
தப்பி்த்த எழில்மாறன் பெருமணம் கிராமத்திற்கு சென்று நடந்ததைக் கூறினார். உடனே ஆத்திரமடைந்த கிராம மக்கள் 300 பேர் கிணற்றுப் பகுதிக்கு வந்து செல்வக் குமார் உடலை மீட்டனர். அருண்குமாரைப் பிடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேரையூர் போலீசார் பெருமணத்திற்கு சென்று அருண்குமாரை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறினர். ஆனால் கிராம மக்கள் மறுத்ததோடு, போலீசாருடன் தகராறு செய்தனர்.
இதையடுத்து சுமார் 200 போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்களை ஊருக்குள் விடாமல் கிராம மக்கள் தடுத்தனர். மேலும், போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இதில் 8 போலீசார் படுகாயம் அடைந்தனர். உடனே போலீசார் தடியடி நடத்தினர்.
மக்கள் கலைந்து போகாததால் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். பின்பு தான் மக்கள் கலைந்து ஓடினர். போலீசார் அருண்குமாரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செல்வகுமாரை துரத்திய குணசேகரன், பரிசுத்தம் ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெருமணத்தில் பதட்டம் நிலவுகிறது. இதனால் இன்று அங்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அரசு நடுநிலை பள்ளியும் மூடப்பட்டுள்ளது.