திமுக நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கைது!
அவரது சொந்த கிராமமான திருத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான தனிப்படையினர் கருப்பசாமி பாண்டியனை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை பாளையங்கோட்டை ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பால்பாண்டி, கருப்பசாமி பாண்டியனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கருப்பசாமி பாண்டியன் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கருப்பசாமி பாண்டியன், அவரது உறவினர் நடுவக்குறிச்சியை சேர்ந்த கொம்பையா தேவர் என்பவரது நிலத்தை அடிமாட்டு விலைக்கு மிரட்டி எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கொம்பையா தேவர் மனைவி நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரிலேயே போலீசார் கருப்பசாமி பாண்டியனையும் அவரது சகோதரர் சங்கரசுப்புவையும் கைது செய்துள்ளனர்.
முன்னதாக இந்தக் கைதை கண்டித்து பாளை தாலுக்கா அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருப்பசாமி பாண்டியன் மீது சொத்து குவிப்பு வழக்குகளும் போடப்படலாம் என்றும், அவர் தென்காசி பகுதியில் நில அபகரிப்பு செய்திருப்பதாகவும், அது குறித்தும் வழக்கு போடலாம் என்றும் காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
இன்று சென்னையில் திமுக வழக்கறிஞர் கூட்டம் நடைபெறுவதால் திமுக வக்கீல்கள் தென்காசியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பசாமி பாண்டியன் மற்றும் அவரது சகோதரரை வேலூர், திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பரிதி இளம்வழுதிக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்:
இதற்கிடையே, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலர் ரங்கா ரெட்டி, போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உதவியாளர் மோசடியாக அபகரித்துக் கொண்டார். இதற்கு பரிதி இளம்வழுதி உடந்தை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பரிதி இளம்வழுதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பரிதி இளம்வழுதிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். விசாரணைக்காக சம்பந்தப்பட்ட போலீசார் அழைக்கும்போதெல்லாம் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications