ஆவின் பாலில் தண்ணீர் கலந்த லாரி டிரைவருக்கு பொதுமக்கள் சிறப்பு 'கவனிப்பு'!
உடுமலைப்பேட்டை: ஆவின் பாலில் தண்ணீரைக் கலந்த டிரைவரை விவசாயிகள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கோட்டூரில் உள்ள ஆவின் குளிரூட்டு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
கோட்டூரில் இருந்து வரும் பாலின் அடர்த்தி சமீபகாலமாக குறைந்து வந்தது. இதனால், கூட்டுறவு சங்கத்தினருக்கும், ஆவின் அதிகாரிகளுக்கும் இடையே பால் விலை நிர்ணயிப்பதில் தினமும் தகராறு ஏற்பட்டது. கூட்டுறவு சங்கத்தினரும், விவசாயிகளும் பாலில் தண்ணீர் கலப்படுவது குறித்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று கோட்டூருக்கு பாலை கேன்களில் எடுத்து லாரியை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தனர். அப்போது, லாரி ஓட்டுநர் பழனிசாமி, உரல்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் கொண்டு சென்று 400 லிட்டர் பாலை எடுத்து கொண்டு அதற்கு பதிலாக தண்ணீர் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு திரண்ட பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள், பாலில் தண்ணீர் கலந்து மோசடியில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் பழனிசாமி மற்றும் அதற்கு உதவிய தோட்ட உரிமையாளர் ஆகியோருக்கு 'தர்மஅடி' கொடுத்து மடத்துகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.