பரமக்குடி வன்முறை: ராமேஸ்வரத்தில் பஸ்கள் ஓடவில்லை-சுற்றுலாப் பயணிகள் தவிப்பு
ராமேஸ்வரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பரமக்குடியில் நேற்று நடந்த வன்முறையின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மதுரையிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. மேலும் பார்த்திபனூர் உள்ளிட்ட சில இடங்களில் வன்முறை மூண்டது.
தற்போது வன்முறைச் சம்பங்கள் ஓய்ந்துள்ளன. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பார்த்திபனூர், கமுதி, பெருநாழி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கமுதியில் சில பேருந்துகள் மட்டும் ஓடுகின்றன. கடைகள் பெரும்பாலும் திறந்துள்ளன. சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பரமக்குடியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. இதனால் சுற்றுலாவாக வந்த பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். ராமேஸ்வரம் வரும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன.