தலைமை தாங்கும் தகுதி இல்லை என நினைத்து விஜயகாந்த் பின் சென்ற இடதுசாரிகள்: திருமாவளவன்
கடலூர்: தங்களுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை என நினைத்துத் தான் இடதுசாரிக் கட்சிகள் விஜயகாந்த் பின் சென்றுவிட்டன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு ஆதரவாக அவர் ஆதரவு திரட்டி திட்டக்குடி, ராமநத்தம் பகுதிகளில் பேசுகையில்,
ஈழத்தமிழர் உரிமை பிரச்சனை, தமிழர் பிரச்சனை, தமிழ்நாட்டுப் பிரச்சனை, காவிரி ஆற்று பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை என அனைத்து பிரச்சினைகளிலும் அனைத்து வகைகளிலும் பங்கேற்றுதான் இன்று உங்கள் முன் நிற்கிறோம்.
அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்து சமூக நல்லிணக்கத்திற்கு போராடும் கட்சியாகத்தான் உங்கள் முன் நிற்கிறோம்.
நானும் வயதிலே சிறிய தலைவனாக இருந்தாலும் பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் கூட்டணி அமைத்து தலைமை தாங்க வாருங்கள் என்று அழைத்தேன்.
ஆனால், அந்த கட்சிகளும் (கம்யூனிஸ்ட்) ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி தங்களுக்கு இல்லை என நினைத்து விஜயகாந்த் பின் சென்றுவிட்டனர்.
இதனால் தான் கிருஸ்துவ, முஸ்லிம் அமைப்புகளுடன் இணைந்து மக்கள் ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து மக்களை சந்திக்கிறோம் என்றார்.
திருமாவளவன் மீது 4 வழக்குகள்:
இந் நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மேயர் வேட்பாளராக சித்ராவுக்கு ஆதரவாக திருமாவளவன் கடந்த 9ம் தேதி தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது தேர்தல் விதிமுறையை மீறி அனுமதியின்றி 15 வாகனங்கள் பிரசாரத்தில் சென்றதாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் திருமாவளவன், மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார், வேட்பாளர் சித்ரா, மற்றும் உறுப்பினர்கள் கணேசன், விமல், சந்தனராஜ் ஆகிய 6 பேர் மீதும் 341, 171 (எச்), 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே போல தென்பாகம் போலீசில் 2 வழக்குகளும், முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.