டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்லமுத்து செயல்படுகிறார். இவர் போக 13 உறுப்பினர்களும் ஆணையத்தில் உள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு சென்னை பாடியில் உள்ள செல்லுமுத்துவின் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸ் குழு வந்தது. பின்னர் அவர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் தேர்வாணையத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு வேட்டை நடந்து வருவதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்வாணைய உறுப்பினர்களான டி.சங்கரலிங்கம், டாக்டர் கே. லட்சுமணன், எம்.ஷோபினி, டாக்டர் சேவியர் ஜேசு ராஜா, டாக்டர் கே.எம்.ரவி, ஜி.சண்முக முருகன், கேகே ராஜா, டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம், வி.ரத்தினசபாபதி, டாக்டர் பி.பெருமாள்சாமி, டி.குப்புசாமி, ஜி.செல்வமணி ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.
இவர்களில் பன்னீர்செல்வத்தின் வீடு திருச்சியில் உள்ளது. அங்கும் ரெய்டு நடந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் 10 அதிகாரிகள் வரை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எனவே கிட்டத்தட்ட 150 அதிகாரிகள் வரை இந்த 14 பேரின் வீடுகளிலும் குவிந்து சோதனையில் ஈடுபட்டிருப்பதால் அரசு அலுவலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
மொத்தம் 13 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும், சென்னையில் பாடி, கொரட்டூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு டிஎஸ்பி இருப்பதாக கூறப்படுகிறது.
ஏன் சோதனை?
உதவி பல் மருத்துவர் தேர்வில் தவறான வழியில் பணம் பெற முயற்சித்தது, மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு நடந்த தேர்வில் ஊழல், ஊழல் கண்காணிப்புத்துறை விசாரணைக்குத் தேவையான ஆவணங்களைத் தர மறுத்தது ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.
மேலும், செல்லமுத்து உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13 (2), 15 ஆகிய பிரிவுகள் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை பிற்பகலுக்கு மேலும் நீடித்து வருகிறது. இதில் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்ட்டுள்ளது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications