மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி இக்பால் மிர்ச்சி ஜாமீனில் விடுதலை
லண்டன்: மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் வலதுகரமான இக்பால் மிர்ச்சிக்கு லண்டன் கோர்ட் ஜாமீன் கொடுத்து விடுதலை செய்துள்ளது.
கடந்த 1993ம் தேதி மும்பையில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம். இவர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளால் தேடப்பட்டு வருகிறார்.
தாவூத் இப்ராஹிமின் வலதுகரமாக செயல்பட்டவர் இக்பால் மிர்ச்சி (61). இவர் தாவூத் இப்ராஹிம் நடத்தி வந்த போதைப் பொருள் வியாபாரத்தை கவனித்து வந்தார். இந்தியாவில் நடந்த பல கொலை, பணபறிப்பு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இக்பால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.
கடந்த 1990ம் ஆண்டு மும்பையில் இருந்து தலைமறைமான இக்பால், துபாய் மற்றும் லண்டனில் என மாறிமாறி இடம்பெயர்ந்து வந்ததாக தகவல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1994ம் ஆண்டு இன்டர்போல் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு, போதை கடத்தல் உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த 1995ம் ஆண்டு ஸ்காட்லாந்து யார்ட் மூலம் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்தியாவில் இருந்த போது, தனது உதவியாளர் நதீம் காதர் என்பவரை சுட்டு கொலை செய்ததாக வழக்கில் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அக்டோபர் 13ம் தேதி இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் அருகே உள்ள ரோம்போர்ட் என்ற பகுதியில் 6 படுக்கை அறை கொண்ட தனது வீட்டில் இருந்த போது இக்பால், போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, இக்பால் மிர்ச்சி ஜாமீன் கோரி ரேட்பிரிட்ஜ் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இக்பால் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் வரும் நவம்பர் 10ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.