அத்வானி செல்லும் பாதையில் குண்டுவைத்தவர்களை கண்டுபிடிக்க ஜெ. உத்தரவு
சென்னை: பாஜக மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொள்ளவிருந்த பாதையில் வெடிகுண்டு வைத்தவர்களை விரைவில் கண்டுபிடிக்குமாறு முதல்வர் ஜெய்லலிதா உத்தரவிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி ஊழல் மற்றும் கருப்புப்பணத்திற்கு எதிராக ஜன் சேத்னா யாத்திரை என்னும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார். தனது யாத்திரையின் ஒரு பங்காக அவர் கடந்த 27ம் தேதி மதுரைக்கு வந்து பிரசாரம் செய்தார். கடந்த 28ம் தேதி அவர் மதுரையில் இருந்து ராஜபாளையம் வழியாக திருநெல்வேலி செல்லவிருந்தார்.
ஆனால் அவர் புறப்படுவதற்கு முன்பு அவர் செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு வைத்தவர்களை விரைந்து கண்டுபிடிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டபோது, கடந்த 28ம் தேதி அன்று அவர் செல்ல இருந்த திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் உள்ள ஆலம்பட்டி என்னும் கிராமத்தில் கவண்டன் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டை ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு அதிமுக கவுன்சிலர் செல்வம் மூலமாக காவல் துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பைப் வெடிகுண்டினை செயலிழக்கச் செய்து நாசவேலையை முறியடித்துள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் சதிச்செயல் முறியடிக்கப்பட்டது எனக்கு மன நிம்மதியை அளிக்கிறது. இந்த சதிச்செயலை முறியடிப்பதற்கு காரணமாக இருந்த ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், அதிமுக கவுன்சிலர் செல்வம், காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த நிபுணர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி (நேற்று) என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சதிச்செயலை முன்கூட்டியே முறியடித்ததற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சதிச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications