104வது ஜெயந்தி, குரு பூஜை- முத்துமராமலிங்கத் தேவர் சிலைக்கு ஜெ. அஞ்சலி
ஆன்மீகத்தையும், அரசியலையும் தனது இரு கண்களாகப் பாவித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 104வது ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 3 நாட்களாக பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன.
இன்று குரு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக வந்திருந்தனர்.
முக்குலத்தோர் சமூ்கத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பெரும் திரளாக வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
போலீஸாருடன் ஸ்டாலின் வாதம்
இதற்கிடையே, இன்று காலை பசும்பொன் நினைவிடத்தில் காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக காலை 8 மணிக்கே ஸ்டாலின் பசும்பொன் வந்து விட்டார்.
ஆனால் 11 மணிக்குப் பிறகு வருமாறு ஸ்டாலினிடம் போலீஸார் கூறினர். இதைக் கேட்டு கோபமடைந்த அவர் ஏன் என்று கேட்டபோது, அதிமுகவினர் கூடுதல் நேரம் கேட்டிருப்பதால் உங்களது நேரம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர் போலீஸார்.
இதையடுத்து போலீஸாருடன் ஸ்டாலின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதித்தனர். அதன் பின்னர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி விட்டுக் கிளம்பினார்.
பலத்த பாதுகாப்பு
தேவர் குரு பூஜையையொட்டியும், பரமக்குடியில் தலித்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டினால் நிலவும் அதிருப்தியையும் மனதில் கொண்டு ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பசும்பொன் கிராமத்திலும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பசும்பொன் கிராமத்திற்கு வரும் அனைத்து சாலைகளின் எல்லைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கபப்ட்டுள்ளன.
முன்னதாக செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், தேர்தல் நேரம் என்றால் மட்டுமே பசும்பொன் கிராமத்துக்கு வந்து அஞ்சலி செலுத்துபவர்கள் நாங்கள் இல்லை. ஆனால் ஜெயலலிதா அப்படிப்பட்டவர். தேர்தல் நேரம் என்றால்தான் அவருக்கு இந்த நினைவே வரும்.
சென்ற வருடம் பசும்பொன்னுக்கு வந்து, தேவர் நினைவிடத்தில் தங்கத் தகடு செய்து போர்த்தப்படும் என்றார் ஜெயலலிதா. இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றார் ஸ்டாலின்.