1 ஆண்டாக கத்தார் சிறையில் இருந்த 4 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
நாகர்கோவில்: மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மீனவ அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் அருள்பணி சர்ச்சில் கூறியதாவது,
கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி குமரி மாவட்டம், சின்னமுட்டம் ஆண்டனி செபாஸ்டியன், இனையத்தைச் சேர்ந்த சூசைராஜ், சேசுபுத்திரன் மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலு ஆகிய 4 பேரும் பஹ்ரைன் நாட்டில் மீன் பிடிக்கச் சென்றனர்.
அப்போது அவர்கள் சென்ற விசைப்படகு கத்தார் நாட்டு கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறி அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களைப் போல மேலும் 45 பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்தவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த திமுக ஆட்சியின் போது மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கு நடத்த தேவையான பணம், வழக்கறிஞர் கட்டணம், நாடு திரும்ப தேவையான பணம் ஆகியவை உட்பட ரூ. 49 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியது. ஆனால் அந்த தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் உடனிருந்த மற்ற மீனவர்களிடம் கடன் வாங்கி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
எனவே நாடு திரும்பி உள்ள மீனவர்களின் கடன் தொகையை திரும்ப செலுத்தும் வகையில் ரூ.49 லட்சத்தை மத்திய அரசு உடனடியாக கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் சிறைவாசம் அனுபவித்த மீனவர்களுக்கு தேவையான நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றார்.