பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி ஜெ. சுப்ரீம் கோர்ட்டில் மனு
1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கில் ஆஜராகி விளக்கமளிக்காமல் ஜெயலலிதா காலதாமதம் செய்ததை அடுத்து அக்டோபர் 20-தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய இரண்டு நாட்களும் பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்பு ஆஜராகி அவர் கேட்ட 300க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
150 சாட்சிகள் தொடர்பான கேள்விகள் போக மீதமுள்ள 199 சாட்சிகள் தொடர்பான கேள்விகளை தொடர மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கினை நீதிபதி அக்டோபர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா தரப்பு ஆட்சேபம்
இதனை ஏற்காத ஜெயலலிதா தரப்பு மூத்த வக்கீல் பி.குமார், 2 நாள்களுக்கு மட்டுமே 313-ன் கீழ் கேள்விகளுக்கான பதில்களை பதிவு செய்யும் நடைமுறையை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டார்.
இதை ஆட்சேபித்த அரசு தரப்பு மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா, 2 நாள்களுக்கு மட்டுமே கேள்வி-பதில்களை பதிவு செய்யும் விசாரணையை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 313-ன் கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் கால வரையறை விதிக்கவில்லை என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதை ஜெயலலிதா தரப்பு ஏற்காததால், நவம்பர் 8-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அப்போது ஜெயலலிதாவை ஆஜராக உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகவும் ஜெயலலிதா தரப்புக்கு வாய்ப்பளித்தார்.
இதனையடுத்து, பெங்களூரு நீதிமன்றத்தில் நவம்பர் 8-தேதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி இன்று ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 20 மற்றும் 21 ம் தேதி மட்டுமே பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நவம்பர் 8-ம் தேதி ஆஜராகக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. எனவே எழுத்து மூலம் பதிலளிக்க உத்தரவிடவேண்டும். இந்த மனு ஓரிருநாளில் விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை இரண்டு நாட்கள் ஜெயலலிதா ஆஜரானபோதே பாதுகாப்பிற்காக 30 லட்சம் ரூபாய் கர்நாடக அரசு செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.