விருதுநகர் மாவட்டத்தில் 5 கிராமங்களுக்குள் அரசியல் கட்சியினர் நுழைய தடை
விருதுநகர்: மறுவாக்குப்பதிவு கேட்டு தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் சிவகாசி ஆணையூர் பகுதி மக்கள் தங்கள் ஊராட்சிக்குட்பட்ட 5 கிராமத்திற்குள் அரசியல் கட்சியினர் நுழைய தடை விதித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ளது ஆணையூர் ஊராட்சி. இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது 3 வாக்குப் பெட்டிகளில் இருந்த வாக்குகளை எண்ணாமல் மறைத்து முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறியும், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரியும் ஆணையூர், லட்சுமிபுரம், காந்திநகர், டைலர் காலனி, அய்யம்பட்டி மக்கள் கருப்பு கொடி ஏற்றி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 24ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை 5 கிராம மக்கள் 2 நாட்களாக முற்றுகையிட்டனர்.
இதையடுத்து தீபாவளிக்கு மறுநாள் கலெக்டர் பாலாஜி ஆணையூர் சென்று 5 கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. இதை தொடர்ந்து கிராம மக்கள் வேலைக்கு செல்லாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு வரும் அதிகாரிகளிடம் அவர்கள் எதுவும் பேசாமல் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் கட்சியினர் ஊருக்குள் நுழைய கிராம மக்கள் தடை விதித்துள்ளனர். இதையடுத்து ஆணையூர், லட்சுமிபுரம், டைலர் காலனி, அய்யம்பட்டி உள்ளிட்ட 5 கிராமங்களின் நுழைவு வாயிலில் அரசியல் கட்சியினர் யாரும் ஊருக்குள் நுழையக் கூடாது என்று பேனர் கட்டி வைத்துள்ளனர். அனைத்து அரசியல் கட்சியினரையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications