என்னையும், தலைவர்களையும் கடுமையாக விமர்சித்ததால் வேல்முருகன் நீக்கப்பட்டார்- ராமதாஸ்
சென்னை: என்னையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதால்தான் வேல்முருகன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வேல்முருகனை பாமகவிலிருந்து நீக்கியது பாமகவை மட்டுமல்லாமல், பிற கட்சியினர் மத்தியிலும் கூட வியப்பலைகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் வேல்முருகன் ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கு டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடலூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வேல்முருகன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்துப் பேசியுள்ளார். அதில் என்னையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அக்டோபர் 30, 31 தேதிகளில் சென்னையில் நடந்த கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது வேல்முருகன் நேரில் வரவழைக்கப்பட்டார். அவர் பேசியதன் ஆடியோ பதிவை போட்டுக் காட்டி விளக்கம் கேட்கப்பட்டது. அவரால் சரியான விளக்கத்தைத் தர முடியவில்லை. இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் தொடர்பாக, கட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பேசி வந்தார் வேல்முருகன். கற்பனைக் கதைகளை அவிழ்த்து விட்டு வந்தார். இதனால்தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ராமதாஸ்.