குஜராத்தில் 1032 கள்ள வங்கிக் கணக்குகள்!
அகமதாபாத்: நாட்டில் உள்ள கள்ள வங்கிக் கணக்குகளில் 6 சதவீதம் குஜராத்திலிருந்து இயக்கப்படுவதாக மத்திய நிதித்துறையின் உளவுப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 17209 போலி வங்கிக் கணக்குகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இவற்றில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில்தான் 29 சதவீத போலிக் கணக்குகள் உள்ளதாக மத்திய நிதித்துறையின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெல்லியில் 12.1 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 7.3 சதவீதமும் போலிக் கணக்குகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குஜராத்தில் 6 சதவீதம், அதாவது 1032 போலி வங்கிக் கணக்குகள் புழக்கத்தில் உள்ளனவாம். இந்தக் கணக்குகளில் பெரும் பணம் புழங்குவதாகவும் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் தேசிய அமைப்புதான் மத்திய நிதியமைச்சகத்தின் உளவுப் பிரிவு. சந்தேகத்துக்குரிய வகையில் பரிவர்த்தனை செய்யப்படும் பணம், காசோலைகள், தன்னார்வ அமைப்புகள் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகள், வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைகள் போன்ற அனைத்தையும் இந்த அமைப்பு கண்காணிக்கிறது.
அப்படி கண்காணித்ததில்தான் 17209 கணக்குகள் போலியானவை என தெரியவந்துள்ளது. இவை பெரும்பாலும் கறுப்புப் பணமாக இருக்கும் என இந்த உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.