Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகம் முழுவதும் விடாமல் பெய்யும் கன மழை- 4 மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களிலும் அடுத்த 24 மணிநேரத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வட கிழக்குப் பருவ மழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும், உள்புற தமிழகத்தின் பல இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விடாமல் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து அதே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் மழை விடுவதாக இல்லை, தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது.

தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி கன்னியாகுமரி மாவட்டம் வரை விடாமல் மழை பெய்து வருகிறது.

சென்னையில்

சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கன மழையும், மிதமான மழையுமாக உள்ளதால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. பெரும்பாலான சாலைகள் பெயர்ந்து போய் பள்ளம் பள்ளமாக மாறி வாகனங்களைப் பதம் பார்த்து வருகின்றன. பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களை பெரும் சிரமத்துக்குள்ளாக்கியுள்ளது. புறநகர்களில் நிலைமை மோசம்.

இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருக்கிறது. ஏதோ புயலுக்கு முன்பு நிலவும் அமைதி போல ஒருமாதிரியான அமைதி காணப்படுகிறது. சில இடங்களில் மழை காணப்பட்டது.

பக்கத்து மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

4 மாவட்டங்களுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், கோவை, விழுப்புரம், கடலூர் மாவட்டப் பள்ளிக்கூடங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

24 மணி நேரத்தில் கன மழை

இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோரங்களில் உள்ள 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,

தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 12 செமீ மழை பெய்துள்ளது. கடலூரில் 11, மகாபலிபுரம், சின்னக்கல்லார், மருங்காபுரி, வேடசந்தூரில் தலா 9 செமீ, தொழுதூர், காமாட்சிபுரம் தலா 8, கேளம்பாக்கம், குளச்சல், மேட்டூர் அணை, ஏற்காடு, வேம்பாவூர், நிலக்கோட்டை தலா 7 செமீ மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் பலத்த மழை இருக்கலாம். சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் விடாமல் தொடர் மழை

காவிரி டெல்டா மாவட்டங்களில் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்கள் தண்ணீரில் மிதப்பதால் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக மீன்களை உலர வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் மழையின் காரணமாக வயலில் சாய்ந்து நெற்பயிர்கள் முளைத்துள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் சேதம் அடைந்து உள்ளது. மழையின் காரணமாகவும், கடலில் ராட்சத அலைகள் எழுவதாலும் மீனவர்கள் கடலுக்கு நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.

திருவாரூர் மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது, தொடர்ந்து பெய்து வருகிறது.

கடலூரில்

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையால் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சில பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டு இருந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. பல்லடம் அண்ணாநகர் பகுதியில் இருந்த 35 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதேபோல் திருப்பூர் பாளையக்காடு மெயின் வீதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொங்கலூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்ட தக்காளி பயிர் சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தபடி தண்ணீர் ஓடுகிறது. பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜமுக்காளத் தொழில் முடங்கியது

ஈரோடு மாவட்டத்திலும் மழை நீடிக்கிறது. தொடர் மழை காரணமாக பவானியில் ஜமுக்காள தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது. நூல் நூற்கும் பணி, பாவு சுற்றும் பணி மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் தொழில் நடைபெறவில்லை. இதனால் நெசவாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்திiரில் ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகளில் செங்கல் உற்பத்தி தொழில் நடைபெறவில்லை.

குளிர் தாங்காமல் முதியவர் பலி

சென்னை அயனாவரம் ஏகாஞ்சிபுரம் 4-வது குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (70). இவர் ஈரோடு ரயில் நிலையத்தில், டிரைவர்கள் ஓய்வு அறை அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார். தினமும் வேலை முடிந்ததும், ரயில் நிலையத்துக்கு சென்று முதல் பிளாட்பாரத்தில் ஒரு ஓரமாக படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி அங்கு படுத்து தூங்கிய அவர் குளிர் தாங்காமல் உயிர் இழந்தார்.

சேலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேலத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து பெண் பலி

நீலகிரி மாவட்டம் கேத்தி பாலாடா என்ற இடத்தில் கேரட் எடுப்பதற்காக 9 பெண்கள் உள்பட 11 பேருடன் சென்ற மினி லாரி, நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சாந்தி என்ற 40 வயதுப் பெண் பலியானார். 9 பேர் படுகாயமடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+