டிஎன்பிஎஸ்சியை லஞ்ச ஒழிப்பு சட்ட வளையத்தில் கொண்டு வரலாமா?- அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது குறித்து இன்னும் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசார் கடந்த மாதம் 14ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி செல்லமுத்து உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறியதாவது,
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி கடந்த 80 ஆண்டு காலமாக தன்னாட்சி அமைப்பாக சுதந்திரமாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சட்டவிரோத செயலாகும். எனவே, இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினர்.
அவர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து இன்னும் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.