அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றம் செய்வதை தடை செய்யக் கோரி வழக்கு
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டிபிஐ வளாகத்திற்கு மாற்றும் தமிழக அரசின் முடிவை தடை செய்யக் கோரி வழக்கறிஞர் பிரபாகரன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கடந்த ஆட்சி காலத்தின் போது சென்னை கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு மைய நூலக கட்டிடம் கட்டப்பட்டது. நூலக பயன்பாட்டிற்காக இக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. தற்போது இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றுவது என்றும் அந்த நூலக கட்டிடத்தை குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவது என்றும் அமைச்சரவையில் முடிவு எடுத்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பானது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அமைச்சரவை தவறான முடிவு எடுக்கும் போது நீதிமன்றம் தலையிட அதிகாரம் உள்ளது. கடந்த ஆட்சியில் இந்த நூலகம் கட்டப்பட்டதற்காக தற்போதைய அரசு இதனை மாற்றம் செய்வது தவறு. அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும்.
இந்த நூலகம் முறையாக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க கமிட்டி அமைத்திட உத்தரவிட வேண்டும். அமைச்சரவை முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.