சென்னை: 311 ஏக்கர் பரப்பளவில் திருமழிசையில் புதிய துணை நகரம்
சென்னை: சென்னை நகரின் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு திருமழிசை அருகே 2, 160 கோடி ரூபாயில் புதிய துணை நகரம் (சாட்டிலைட் சிட்டி) அமைப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க ஆலோசனை நிறுவனத்தை விரைவில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில், சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகே, துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 311.05 ஏக்கர் நிலம் திருமழிசை அருகே உள்ளது. அந்த நிலத்திற்கு முறையான இணைப்பு சாலை அமைக்க தேவைப்படும் 12.87 ஏக்கர் நிலம், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலம் கிடைத்தவுடன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.2,160 கோடி செலவில் செம்பரம்பாக்கம், குத்தாம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், வெள்ளவேடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய திருமழிசை துணைக்கோள் நகரம் அமைக்கப்பட உள்ளது.
திருமழிசை துணைக்கோள் நகரம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க விரைவில் ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பணியை டுபிசில்' நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் ஆலோசனை நிறுவனம், அடுத்த 4 மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.
பின்னர், பொதுத்துறை-தனியார்துறை பங்களிப்புடன் (பி.பி.பி.) இந்த திட்டம் நிறைவேற்றப்படும். சாத்தியக்கூறுகள் அறிக்கை கிடைத்ததும், விரிவான திட்ட அறிக்கையும் அதைத் தொடர்ந்து உலகளாவிய டெண்டரும் கோரப்படும். இந்தப் பணிகள் எல்லாம் முடிவடைந்ததும், திருமழிசை துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துணை நகரத்தில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக்கூடிய விலையில் வழங்கப்படும். இந்த துணைக்கோள் நகரத்தில் குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, சாலைகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையம், பூங்கா, விளையாட்டுத் திடல் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.