சென்னையில் மூளைச்சாவடைந்த 53 வயது பெண்ணால் உயிர் பெற்ற 6 பேர்
சென்னை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 53 வயதுப் பெண்ணின் உறுப்புகளை பொருத்தி 6 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளனர் சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்.
சென்னை பரங்கிமலையைச் சேர்ந்தவர் திலகவதி, 53 வயதான இவர் சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர். இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். திலகவதி படிப்படியாக மரணமடைவதை உணர்ந்த அவரது உறவினர்கள் எந்த வித நோயும் தாக்காத திலகவதியின் உடல் உறுப்புகளை தானமாக தர முன்வந்தனர்.
உடல் உறுப்புகள் தானம்
திலகவதியின் இரண்டு கண்களும் சங்கரநேத்திராலயாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவரது இருதயம் 63 வயது பெண்ணுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இரண்டு சிறுநீரகங்கள் இருவருக்கு பொருத்தப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. ஒருவர் மரணமடைந்த நிலையிலும் மரணத் தருவாயில் இருந்த 6 பேரின் உயிரைக்காத்து சாதனை புரிந்துள்ளனர் அப்பல்லோ மருத்துமனை மருத்துவர்கள்.
உறுப்பு தானம் குறித்து அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி. ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது :
மூளைச்சாவு ஏற்பட்ட பின்னர் அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் விழிப்புணர்வு முன்பை விட, தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இருப்பினும் காலதாமதமாக செய்யும் உறுப்புகளால் எவ்வித பயனும் இல்லை.
மரணம் ஏற்பட்ட உடன் உடனடியாக உறுப்புகளை தானம் செய்யவேண்டும். எனவே உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றார்.