சென்னையில் உள்ள 3 எம்.பி தொகுதிகளிலும் தனித்துப் போட்டி- பாமக தீர்மானம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலைப் போலவே, வருகிற லோக்சபா தேர்தலிலும் சென்னையில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று சென்னை மாநகர பாமக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பாமக செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது. கட்சியின் இளைஞர் சங்க செயலாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மான விவரம்:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது.
தில்லுமுல்லு நடத்த வாய்ப்புள்ளதால் வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு மீண்டும் ஓட்டுச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்.
சென்னையில் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை உடனே ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு காரணமாகி ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் சென்னையில் 3 எம்.பி. தொகுதிகளிலும் பா.ம.க. தனித்தே போட்டியிட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிட்டு படு தோல்வியைத் தழுவினார். 4வது இடத்திற்கு அவர் தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.